இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை – 2022

2022-2023 ஆம் கல்வியாண்டிற்குரிய இளநிலைப் பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது. தமிழக அரசின் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.  உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ.தமிழ் இலக்கியம் (60) ஆங்கில இலக்கியம் (60), பொருளியல் (50), அரசியில் அறிவியல் (50), பிகாம் ஷிப்ட 1 (60), பிகாம் ஷிப்ட 2 (60) பிகாம்சிஏ ஷிப்ட 1 (60), பிகாம்சிஏ ஷிப்ட 2 (60), பிகாம் இ-காம் (60) பிபிஏ (60), பிஎஸ்ஸி கணிதம் (48), புள்ளியியல் (40), இயற்பியல் (48), வேதியியல் (48), தாவரவியல் (20), கணினி அறிவியல் ஷிப்ட்1 (50), கணினி அறிவியல் ஷிப்ட் 2 (30), ஆகிய இளநிலைப் பட்டவகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tngasa.in மற்றும் www.tngasa.org என்ற இணையதளத்தின் வாயிலாக வருகிற   22.06.2022 (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.  இவை மட்டுமே உண்மையான இணையதள முகவரிகள். போலியான இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் செல்பேசி, மடிக்கணினி, கணினி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

முதலில் தங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, செல்பேசி எண் முதலான விவரங்களை அளித்துப் பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் தான் சேரவிரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்து அந்தக் கல்லூரியில் உள்ள தகுதியான பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் விண்ணப்பிக்கலாம். ஒரு கல்லூரியில் விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக்கட்டணத்தை ஒருமுறை செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒன்றிற்கு மேற்பட்ட கல்லூரியைத் தேர்வு செய்யும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் கூடுதலாகப் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 48, பதிவுக்கட்டணம் ரூ2.00 மொத்தம் ரூ50 (ஐம்பது மட்டும்)ஐ Debit Card / Credit Card / Net Banking  / UPI மூலம் இணையவழியில் செலுத்தலாம். SC/SCA/ST பிரிவினருக்கு பதிவுக்கட்டணம் ரூ2.00 மட்டும் செலுத்தினால் போதுமானது.  விண்ணப்பத்தை முறையாகப் பூர்த்தி செய்து சமர்ப்பித்த பின்னர் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை மாணவர் சேர்க்கை நடைபெறும் நாளில் சேரவிருக்கும் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் ஐயமிருப்பின் கல்லூரிவளாகத்தில் உள்ள தகவல் வழிகாட்டு மையத்தினை அணுகலாம்.  மாற்றுத்திறனாளி, விளையாட்டுப்பிரிவு, முன்னாள் இராணுவத்தினரின் குழந்தைகள், தேசியமாணவர்படை C சான்றிதழ் பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்தச் சிறப்புப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் சேர விரும்புபவர்கள் அதற்கான ஆதாரச் சான்றிதழ்களின் நகல்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். மாவட்ட, மாநில, தேசிய, அகிலஉலக, அளவிலான சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்கள் (கல்வி மாவட்டம் மட்டும் ஏற்க இயலாது ) மட்டுமே விளையாட்டுப் பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க முடியும். மாவட்ட விளையாட்டு அலுவலரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல், மாணவர் சேர்க்கை நடைபெறும் நாட்கள்பற்றிய விவரங்கள் www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்படும்.